உலகில் அதிகரிக்கும் கொரோனா; இந்தியாவில் முன்னெச்சரிக்கை தீவிரம்!

கொரோனா
கொரோனா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலகில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சீனாவில் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று உலகெங்கும் பரவி, பெரும் நாசத்தை விளைவித்தது. இந்நிலையில் தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அதேபோல அமெரிக்காவிலும் மறுபடியும் கொரோனா வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை  மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.இதற்கு இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பின் ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

-இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com