வடபழனி ஆண்டவர் கோயிலுக்குரிய நிலத்தை அளக்க நீதிமன்றம் உத்தரவு!

வடபழனி ஆண்டவர் கோயிலுக்குரிய நிலத்தை அளக்க நீதிமன்றம் உத்தரவு!
Updated on

சென்னை, வடபழனியில் உள்ளது பிரபலமான முருகன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சென்னையில் பல இடங்களில் நிலங்கள் உள்ளன. அவற்றில் சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் உள்ள ஒரு ஏக்கர் 92 செண்ட் நிலத்தை அளவீடு செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி, வடபழனி ஆண்டவர் கோயில் துணை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தில் ஒரு பகுதி சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சாலையை அளவீடு செய்து எல்லை வரையறை செய்யவும், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூறி மாம்பலம் தாசில்தாரர், கோயிலுக்கும் மாநகராட்சிக்கும் 2016ம் ஆண்டு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தில் வேறு ஒரு நிலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் கோயில் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் கோயில் நிலத்தை அளவீடு செய்யக் கோரி, மாநகராட்சிக்கும், தாசில்தாரருக்கும் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தகுதியான ஒரு சர்வேயரை கொண்டு கோயில் நிலத்தை அளவீடு செய்து இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மீண்டும் ஏப்ரல் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com