ஆளுநரின் அதிரடி விமர்சனம், குறையும் மாணவர் சேர்க்கை, அமைச்சர் மீதான வழக்கு... சிக்கலில் உயர்கல்வித்துறை!

ஆளுநரின் அதிரடி விமர்சனம், குறையும் மாணவர் சேர்க்கை, அமைச்சர் மீதான வழக்கு... சிக்கலில் உயர்கல்வித்துறை!

Published on

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றன. அதில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதால் உயர்கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநரும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி தலைமையில், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆளுநர், பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத் தன்மையுடன் சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. அதில் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதில்லை என்றும் பேசியிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை சரியான முறையில் நிரப்ப வேண்டும் என்றும் பல முக்கியமான பதவிகள் நீண்டகாலமாகவே நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கியமான பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்காலிக ஏற்பாடாகவே பணியிடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் திடீரென்று பல்கலைக்கழக பிரநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தியதும், அதில் உயர்கல்வித்துறையின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்திருப்பதும உயர்கல்வித்துறை வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கொரானா பரவலுக்குப் பின்னர் தொலைதூரக்கல்விக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2015ல் எடுக்கப்பட்ட AISHE அறிக்கையின் படி தொலைதூரக்கல்வி முறையில் பயிலும் மாணவர்களில் 63 சதவீதம் பேர் தமிழ்நாடு, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாக இதுருககிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகரித்து வந்தாலும், கொரானா காலத்திற்கு பின்னர் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நேரடி வகுப்புகளில் சேராமல் தொலைதூரக்கல்வியை தேர்வு செய்யும் போக்கு கடந்த கல்வியாண்டிலும் அதிகரித்துள்ளது.

இது தவிர உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி சம்பந்தப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. 2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சைதாப்பேட்டையில் உள்ள ஒரு இடத்ரை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2007ல் நீதிமன்றம் அவரை விடுவித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. இதில் நாளை தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com