இந்தியாவை பற்றி வெள்நாட்டில் விமர்சிப்பது ராகுலுக்கு அழகல்ல: அமித்ஷா!

இந்தியாவை பற்றி வெள்நாட்டில் விமர்சிப்பது ராகுலுக்கு அழகல்ல: அமித்ஷா!

வெளிநாடு சென்று இந்தியாவை குறைகூறி விமர்சித்து வருவதாக ராகுல் காந்தி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். வெளிநாடு சென்றால் எப்படி பேச வேண்டும் என்பதை அவர், தனது முன்னோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் இந்தியாவை குறைகூறி பேசுவது எந்த ஒரு தலைவருக்கும் அழகல்ல. ராகுல்காந்தி எதை பேசினாலும் கவனமாக இருக்க வேண்டும். அதை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை குறைகூறி விமர்சித்து வருவதை சுட்டிக்காட்டி அமித்ஷா இவ்வாறு கூறினார்.

தேசபக்தி உள்ள எவரும் இந்திய அரசியலை பற்றி வெளிநாட்டில் பேசமாட்டார்கள். ஆனால், நீங்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவையும் இந்திய அரசியலையும் குறைகூறி விமர்சிக்கிறீர்கள்.

இந்தியாவை பற்றி வெளிநாட்டில் விமர்சிப்பது ஒரு தலைவருக்கு அழகல்ல, உங்கள் முன்னோர்கள் எப்படி பேசினார்கள், எப்படி பழகினார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார் அமித்ஷா.

குஜராத் மாநிலம், சித்தாபூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித்ஷா பேசினார். அப்போது மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை அவர் விளக்கினார். மோடி ஆட்சியில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்தியாவை விமர்சிப்பதை இன்னும் கைவிடவில்லை.

புதிய நாடாளுமன்ற வளகாகம் திறப்பு விழாவை நீங்கள் புறக்கணித்தீர்கள். செங்கோல் நிறுவப்பட்டதையும் குறைகூறினீர்கள். ஜவாஹர்லால் நேரு செய்திருக்க வேண்டிய ஒரு காரியத்தை இப்போது பிரதமர் மோடி செய்துள்ளார். இதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

முகலாயர் ஆட்சிக் காலத்தில் ராமர் ஆலயம் இடிக்கப்பட்டது. ஆனால், அதை கட்டுவதற்கு முந்தை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது மோடி ஆட்சியில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்படும் என்றார்.

ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது. மோடி ஆட்சியில்தான் பழங்குடியினப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில ஊழல் தலைவிரித்தாடியது. நிர்வாகம் சீரழிந்து இருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. ஆனால், மோடி ஆட்சியில் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று கூறினார்.

குஜராத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 26 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை பா.ஜ.க. உறுதி செய்ய வேண்டும் என்றார் அமித்ஷா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com