மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெய்த பெருமழையாகும். இதனால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இப்போது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல், நாளை அதாவது 5ம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் தற்போதுவரை அதிக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் மழை கொட்டித்தீர்க்கும் நிலையில், மேற்கு தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு ஏரி போல காட்சியளிக்கிறது. கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சியும், முதலை ஒன்று சாலையை கடந்துசெல்லும் காட்சியும் நம்மை கதிகலங்க வைக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சென்னையில் இன்று இதுவரை 34 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 1976 ஆம் ஆண்டு ஒரு நாளில் 47 சென்டிமீட்டர் மழை பெய்ததே இதுவரை சென்னையில் பெய்த அதிகபட்ச மழையாகும். கடந்த 24 மணி நேரத்திலேயே 34 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால், இது மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2015இல் வெள்ளம் ஏற்பட்ட போதே 33 சென்டிமீட்டர் மழைதான் பதிவாகி இருந்தது. ஆனால் இன்று அதைவிட அதிகமாக மழை செய்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்படி கொடூரமாக கொட்டித்தீர்க்கும் மழை, இரவுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.