அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்..பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா?: அதிமுக-வின் சி.வி.சண்முகம்!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

அதிமுக கட்சியின்  51-வது தொடக்க விழா கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அவற்றை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்தில் அதிமுக 51-வது தொடக்க விழாவை இன்று கொடியேற்றி துவக்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம்.

அதன்பின் செய்தியாளர்களிடம் சி.வி. சண்முகம் பேசியதாவது;

கோவையில் நடந்த கார் சிலிண்டர் குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று வரை எதுவும் பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் 40% அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், அவருக்கு மிரட்டல் வருகிறது.

மேலும், அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்தபோது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர்.

இப்போது அமைச்சர் பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு திமுக-வில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அவருக்கு எந்த அடிப்படையில் இந்த பதவியைக் கொடுத்தார்கள்? அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம் பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா என்று சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com