

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரோல் போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிகப் பயன்பாடு மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இதை தங்களுக்கு சாதகமான பயன்படுத்திக்கொண்டு சைபர் மோசடிக்காரர்கள் மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருவதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஒருவருக்கு LPG-க்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், உடனடியாகப் பணம் செலுத்தாவிட்டால் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. LPG பற்றாக்குறை குறித்த செய்திகள் பரவி வருவதால் பதற்றமடைந்த அவர் அந்தச் செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். உடனடியாக அவருடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டதுடன், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை அங்கீகரிக்கப்படாத பணம் எடுப்பதற்கான மெசேஜ்களும் வந்துள்ளது. அத்துடன் அவரது வாட்ஸ்அப் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக அவர் அதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்று போது, இதுபோன்ற பல புகார்கள் பதிவாகியிருப்பது அவருக்கு தெரியவந்தது. மோசடிக்காரர்கள், 'LPG கேஒய்சி நிலுவையில் உள்ளது', 'LPG சிலிண்டருக்கான ஆதார் இணைப்பு நிலுவையில் உள்ளது', அல்லது 'LPG விநியோகத்தைத் தொடர உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும்' போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்வர்களின் பணத்தை திருடி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், சிலிண்டர் புக்கிங் மோசடி விஷயத்தில் SMS, வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வழியாக வரும் அறியப்படாத அல்லது சந்தேகத்திற்கிடமான லிங்கை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறும் டெல்லி காவல்துறை ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை குறித்த இதுபோன்ற வதந்திகள் சைபர் குற்றவாளிகளால் திட்டமிடப்பட்ட ஒரு புரளியாக இருக்கலாம் என்று டெல்லி காவல்துறை தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக காவல்துறை அல்லது சைபர் செல்லுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் இதுபோன்ற சைபர் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மோசடிக்காரர்கள் புதுப்புது வழிகளை கையாட்டு பொதுமக்களுக்கு ஆசை காட்டியோ அல்லது அவர்களை பயப்பட வைத்தோ அவர்களிடமிருந்து தனிநபர் விவரங்களைப் பெற்று மோசடி செய்கின்றனர். இதனால் அவர்களின் வங்கிக்கணக்கில் உள்ள பயம் கண் இமைக்கும் நேரத்தில் திருடப்பட்டு விடுகிறது. குறிப்பாக மொபைல் நம்பருக்கு SMS மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ லிங்க்குகளை அனுப்பி அதை கிளிக் செய்ய வைத்து மோசடி செய்கின்றனர்.
இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று காவல்துறை மற்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.