

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற எதிர்பாரா விபத்தில் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் சிலிண்டர் வெடிப்பு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், இரவு சுமார் 7 மணியளவில் பலூன்களுக்குக் காற்று நிரப்பப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தின் தாக்கத்தால் சிலிண்டரின் உதிரிபாகங்கள் சிதறி அங்கிருந்த மக்கள் மீது பலமாகத் தாக்கியதில் பலர் நிலைகுலைந்து விழுந்தனர்.
இந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் மக்களின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். விபத்து நடந்த பகுதியில் சிதறிக்கிடந்த உதிரிபாகங்கள் அப்பகுதி எவ்வளவு தீவிரமான பாதிப்பைச் சந்தித்தது என்பதை உணர்த்தின.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த தனியார் வாகனங்கள் மூலம் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பலூன் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் தரம் குறைந்ததா அல்லது முறையான அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சிலிண்டரை இயக்கியதுதான் விபத்துக்குக் காரணமா என்பது குறித்தும், உரிமையாளரின் அலட்சியம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.