சென்னையில் விறகு அடுப்புக்கு மாறும் சாலையோர கடைகள்..! இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?

chennai hotels
chennai hotels
Published on

சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பல சாலையோர உணவகங்கள் மற்றும் சிறிய ஹோட்டல்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன. குறிப்பாக டீக்கடைகள் மற்றும் டிபன் சென்டர்களில் இந்த மாற்றம் அதிக அளவில் காணப்படுகிறது.

சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர்(Commercial LPG), சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் விநியோக தாமதம் காரணமாக பல சாலையோரக் கடைகள், சிறிய உணவகங்கள், ஸ்னாக்ஸ் மற்றும் பரோட்டா கடைகள் நவீன, புகையில்லா விறகு அடுப்புகளுக்கு(Smokeless Wood Stoves) மாறி வருகின்றன. குறைந்த விறகு செலவு, அதிக வெப்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இத்தகைய அடுப்புகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று.

வணிக ரீதியான பயன்பாட்டிற்கான புகையில்லா விறகு அடுப்புகள் ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளுக்கு ஏற்றவை என்பதால் மக்கள் இந்த குறைந்த புகையை வெளியிடும், அதிக வெப்பத் திறன் கொண்ட நவீன விறகு அடுப்புகளால் எரிபொருள் செலவை 50% வரை சேமிக்க முடியும் என்பதால் வாங்குகிறார்கள். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் சிலிண்டர் தட்டுப்பாடு தான் என்றாலும், எரிவாயு சிலிண்டரை விட செலவு குறைவு, சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் அடுப்புகள் மற்றும் விறகு அடுப்பில் சமைக்கப்படும் உணவுகளுக்கு குறிப்பாக பிரியாணி மற்றும் மீன் குழம்பு போன்றவற்றிற்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வணிக சிலிண்டர் முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். தினமும் 400 வணிக சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படும் நிலையில் தற்போது 800 முதல் 1000 சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், அதிகமான முன்பதிவு காரணமாக வணிக சிலிண்டர் டெலிவரி தாமதமாவதால், சில ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் எண்ணிக்கையும் குறைத்து விடுகின்றனர்.

தற்போது சாலையோர கடைகள் மட்டுமல்லாது பல ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் கடைகளும் வணிக எரிவாயு சிலிண்டருக்காக காத்திருக்காமல் நவீன விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

விறகு அடுப்பில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

விறகு அடுப்பில் சமைத்து உண்பது, தற்கால நவீன அடுப்புகளை விட அதிக சுவையையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.

விறகு எரியும் போது வெளியாகும் புகை உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையையும் வாசனையையும் (Smoky flavor) சேர்க்கிறது.

விறகு அடுப்பு சமையல் மெதுவாக (Slow cooking) நடப்பதால், உணவு எளிதில் செரிமானமாகும் 

விறகு அடுப்பில் வெப்பம் சீராகவும் மெதுவாகவும் பரவுவதால், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

விறகு அடுப்பில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் கெடாமலும், சூடாகவும் இருக்கும்.

விறகு அடுப்பில் அடிக்கடி சமைப்பதால் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. மேலும், விறகு அடுப்பில் வரும் புகையை நீண்ட காலம் சுவாசித்தால் சுவாச கோளாறுகள், நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com