விஜய் மக்கள் இயக்கம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சமூக வலைதளங்கள் பரவிய கருத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையிலாவது நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருக்கிறது. அதே நேரம் அதிமுக பாஜக கூட்டணி முடிவடைந்ததை அடுத்து டெல்லி பாஜக மேலிடம் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவில் வாக்குகளை பெறுவதோடு, கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றே தீர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைமைக்கு உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தமிழ்நாடு பாஜக அதிமுகவை தவிர்த்த எம் டி ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிற கட்சிகளுடன் தீவிரமாக பேசி வருகிறது. மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக நடிகர் விஜய் தலைமையிலான மக்கள் இயக்கத்தை கூட்டணிக்குள் இழுக்க முயற்சி எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
விஜய் மக்கள் இயக்கம் சட்டமன்றத் தேர்தலில் குறி வைத்து தன்னுடைய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து கொண்டிருக்க கூடிய வேளையில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச ஆதரவையாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது காய்களை நகர்த்தி வருகிறார் என்று பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கத்தினுடைய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தளபதி விஜய் பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு தொடர்பு படுத்தி உள்நோக்கத்துடன் சில தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இது முற்றிலும் அறமற்ற பொய் செய்திகளே ஆகும்.
விஜயின் பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்பு படுத்தி துளியும் உண்மை இல்லாத தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. இதற்கும் நடிகர் விஜய்க்கும், விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.