காசா நகரம் மீதான குண்டுமழைத் தாக்குதல் ஆரம்பம்தான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். எதிரிகள் மீதான தாக்குதல் தொடரும். அடுத்து என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் தேவைப்பட்டால் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவோம் என்று லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நிலைகள் மீது அதிரடியாக வான்வழி, தரை வழி தாக்குதலை நடத்தினர். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசினர். இதில் பெண்கள், குழந்தைகள் என 1,300 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காசா நிலைகள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் தரைவழி தாக்குதலை அதிகரிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படையினர் காசா நோக்கி அணிவகுத்துள்ளனர். மேலும் காசா பகுதியிலுள்ள பொதுமக்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறும் இல்லையென்றால் பேரழிவை சந்திக்க வேண்டி வரும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். யூதர்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 1,800-க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இதனிடையே இரான் ஆதரவில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா இயக்கத்தினர், தேவைப்பட்டால் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
”நாங்கள் தயாராக இருக்கிறோம். நேரம் வரும்போது ஹமாஸ் ஆதரவாக களம் இறங்குவோம் என்று ஹெஸ்புல்லா இயக்கத்தின் துணைத் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் சண்டையிலிருந்து விலகி இருக்குமாறு பெய்ரூத் வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் ஹெஸ்புல்லா அமைப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.”
அடையாளம் தெரியாத சிலர் இஸ்ரேல் எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து லெபனான் தெற்கு பகுதியில் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.