பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் (82) நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் மறைந்த செய்தி அறிந்த அவரது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் கருவறையில் உள்ள சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதையொட்டி, காலை 9 மணி முதல் பொதுமக்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலையிலேயே பிரதமர் மோடி இரங்கல் செய்தி பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பக்தர்களும் கதறி அழுத படி பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.