மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களில் ஆர்ப்பாட்டக்கார்ர்கள் மீது குறிப்பாக மாணவர்கள் மீது அதிரடிப் படையினர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மணிப்பூர் அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநில டி.ஜி.பி. வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாக இம்பால் பகுதியில் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு என்ற பெயரில் அதிரடிப் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீது அத்துமீறி நடந்து கொண்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்த நிர்வாகப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.ஜெயந்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முறையாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்இரண்டு இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் சடலம் விடியோ மூலம் வைரலானது. இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களில், மாணவர்கள் ஒன்று திரண்டு இம்பாலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
செவ்வாய்க்கிழமை இரவு உள்ளூர் மக்களுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து போராட்டக் கும்பலை கலைக்க அதிரடிப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகளை வெடித்தனர். மேலும் மாணவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில் 45 மாணவர்கள் காயமடைந்தனர்.
புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அதிரடிப் படையினருடன் மோதல் தொடர்ந்தது. இதில் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான கூட்டுக் குழு அதிரடிப் படையினரின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மனித உரிமைகளை மீறும் வகையில் மாணவர்கள் மீது அதிரடிப்படையினர் பலப்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினர்.
இரண்டு இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிரடிப்படையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டதில் இரு பள்ளி மாணவர்கள் கடுமையாக காயமடைந்தனர். ஒருவருக்கு பல இடங்களில் குண்டுக்காயம் ஏற்பட்டது. மற்றொரு நபர் துப்பாக்கியால் தாக்கப்பட்டதில் தோளில் சதை பிய்ந்ததில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிரடிப் படையினரின் அத்துமீறல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.