
கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக்கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை, ஆவின் நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலனை கருதி ஒன்றிய அரசு கால்நடை காப்பீட்டு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசும் பசு, எருமை, ஆடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம் வழங்க அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் ஆவின் நிறுவனம் முதல் கட்டமாக பசு மாடுகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிட்டு இருக்கிறது.
நடப்பாண்டில் 50 சதவீத மாடுகளுக்கு காப்பீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாடு ஒன்றுக்கு 600 முதல் 700 ரூபாய் வரை காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். அதில் 25 சதவீதம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அமல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இதற்காக வங்கிகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கால்நடை வளர்ப்பவர் தெரிவித்தது, கால்நடைகள் வளர்ப்பு இன்று முக்கிய தொழிலாக உருவெடுத்து இருக்கிறது. அதிலும் பசு வளர்ப்பு முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். குறிப்பாக ஒரு மாடு ஒரு நாளைக்கு கறக்கும் பாலை வைத்தே பல விவசாயிகளினுடைய குடும்பம் இயங்குகிறது. இந்த நிலையில் திடீரென்று மாடுகள் உயிரிழப்பு கால்நடை வளர்ப்பவர்களை மற்றும் விவசாயிகளை பெருமளவில் பாதித்து விடுகிறது.
அதேநேரம் புது மாடு வாங்குவதற்கு பல ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்கு கடன் வாங்கி வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அரசு காப்பீடு வழங்குவதன் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுடைய அவசரக் கால சூழலுக்கு பேரு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.