CHANDRAYAN 3
CHANDRAYAN 3

சந்திராயன்-3 ரோவரை தொடர்ந்து ஸ்லீப் மோடுக்கு சென்ற லேண்டர்!

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சியில் மேற்கொண்டு வந்த இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவரைத் தொடர்ந்து லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்தியா ஏவிய சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்ற நிலையில், நிலவில் சுமார் 100 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவர் பல்வேறு பிரத்யேக தகவல்களை சேகரித்து அனுப்பியது.

சந்திரனில் கடந்த சனிக்கிழமை பகல் முடிந்து இரவு தொடங்கியதால், ரோவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பறக்கவைக்கப்பட்ட லேண்டர் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 40 சென்டி மீட்டர் உயரம் வரை துள்ளிக் குதித்த லேண்டர், 40 செ.மீ. தூரத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை காலை 8 மணிக்கு லேண்டரும் நித்திரை நிலைக்கு (sleep mode)அனுப்பப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதில் உள்ள அனைத்து தரவுகளும் பூமிக்கு அனுப்பப்பட்ட நிலையில், சூரிய ஆற்றல் குறைந்து, பேட்டரி தீர்ந்த பிறகு, லேண்டரும் நித்திரைக் கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வரும் 22 ஆம் தேதி நிலவில் சூரிய ஒளிபட்டு, விக்ரம் லேண்டர் விழிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com