கர்நாடக மாநிலத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் பால் விற்பனை நிறுவனமான நந்தினி தமிழ்நாட்டில் தனது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த தொடங்கியிருக்கிறது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனமாக செயல்பட்டு வருவது நந்தினி நிறுவனம். இது தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தைப் போல கர்நாடகத்தின் செயல்பட்டு வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வரும் நந்தினி, தமிழ்நாட்டில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த தொடங்கி இருக்கிறது. ஆவின் நிறுவனம் உரிய கொள்முதல் விலையை கொடுக்கவில்லை என்று கூறி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் ஆவினுக்கு பால்களை தரத் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், தனியார் மற்றும் வெளி மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்து தொடங்கி இருக்கின்றனர். இதை பயன்படுத்தி கர்நாடகாவின் நந்தினி நிறுவனம் தமிழ்நாட்டில் தன்னுடைய சந்தையை விரிவுபடுத்து தொடங்கி இருக்கிறது.
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.
அதேநேரம் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீரை தராமல் தொடர்ந்து மறுத்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நந்தினி நிறுவனத்தினுடைய வர்த்தகம் விஸ்தரிப்பு தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சங்கங்கள், ஆவின் நிறுவனம் உரிய கொள்முதல் விலையை கொடுக்க தவறியதன் விளைவாகவே நந்தினி நிறுவனம் தன்னுடைய வர்த்தகம் நடவடிக்கை விரிவு படுத்துகிறது என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர்.