மூன்று ஆண்டுகளுக்கு முன் சேகரிக்கப்பட்ட விண்கல்லின் மாதிரிகள் பூமியை வந்தடைந்துள்ளன.
எதிர்காலத்தில் புவியை தாக்கும் என அஞ்சப்பட்ட விண்கல்லின் மாதிரிகளை, நாசா வெற்றிகரமாக சேகரித்து பூமிக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்கு ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை நாசா ஏவியது.
நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பென்னு எரிகல்லில் இருந்து சுமார் 250 கிராம் மண் மாதிரியை ஓசிரிஸ் ரெக்ஸ் சேகரித்தது. இதனை தொடர்ந்து, ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தில் இருந்த கொள்கலன், மண் மாதிரிகளுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
விநாடிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் பயணத்தை தொடங்கிய கொள்கலன், திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. பென்னு விண்கலத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மூலம், பூமியை விண்கற்கள் தாக்குவதற்கு சாத்தியம் உள்ளதா என்பதற்கு தெளிவான விடை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே சமயம், சூரிய குடும்பத்தின் தோற்றம், பூமியில் உயிர்கள் பரிணமித்ததற்கான உண்மை காரணங்கள் கண்டறியப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சுமார் 7 ஆண்டுகள் விண்வெளியில் சுற்றும் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தை, அபோஃபிஸ் என்ற மற்றொரு எரிகல்லிற்கு செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் திட்டம் சரியாக இருக்கும் பட்சத்தில், ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் அபோஃபிஸை 2029 ஆம் ஆண்டு சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.