“வாழ்நாள் முழுவதும் நான் பா.ஜ.க. தலைவர்களுடன் நட்புடன் இருப்பேன் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார், தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், மோதிஹரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ.த. தலைவர்கள் மீது தனக்குள்ள அபரிமிதமான பாசத்தை வெளிப்படுத்தினார்.
பா.ஜ.க. தலைவர்கள் மீது தனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்திய அவர், மோதிஹரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிராகரித்துவிட்டதாகவும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்பட்ட பிறகு தமது கோரிக்கை நிறைவேறியதாகவும் நிதிஷ்குமார் கூறினார்.
மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனது கோரிக்கையை காதுகொடுத்து கேட்ககூட தயாராக இல்லை. ஆனால், 2014 ஆம் ஆண்டு மத்தியில் புதிய ஆட்சி பதவியேற்ற பின்னர்தான் தமது கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தது. 2009 ஆம் ஆண்டில் மத்திய பல்கலைகழகத்துக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிகாரில் மத்திய பல்கலைக்கழகம் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட இயக்கத்தை மோதிஹரியிலிருந்து தொடங்கியதால் அங்கு மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். மேலும் மோதிஹரியில்தான் மகாத்மா கல்விச்சுடர் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்று நிதிஷ் கூறினார்.
அதன்பின் பலமுறை மோதிஹரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுகோள் விடுத்தும் முந்தைய மத்திய அரசு எனது கோரிக்கையை ஏற்கவில்லை. அந்த சமயத்தில் நான் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய கல்வி அமைச்சரையும் சந்தித்தேன். ஆனால், எந்த பலனும் ஏற்படவில்லை என்றார் நிதிஷ்குமார்.
கயையில் மத்திய பல்கலைக்கழகம் திறக்க முன்னாள் மன்மோகன் சிங் அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், 2016 ஆம் ஆண்டில்தான் மோதிஹரியில் மகாத்மா காந்தி பெயரில் மத்திய பல்கலைக்கழம் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது என்றார் நிதிஷ்குமார்.
பா.ஜ.க.வின் மோதிஹரி தொகுதி எம்.பி.யான ராதா மோகன்சிங் மற்றும் சில பா.ஜ.க. தலைவர்களை சுட்டிக்காட்டி அவர்கள் எல்லோரும் தனது நண்பர்கள் என்று நிதிஷ்குமார் குறிப்பிட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுடனான எனது நட்பு தொடரும், இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் நிதிஷ் அறிவுறுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க.வின் மோதிஹரி தொகுதி எம்.பி.யான ராதா மோகன்சிங் மற்றும் சில பா.ஜ.க. தலைவர்களை சுட்டிக்காட்டி அவர்கள் எல்லோரும் தனது நண்பர்கள் என்று நிதிஷ்குமார் குறிப்பிட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்களுடனான எனது நட்பு தொடரும், இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் நிதிஷ் அறிவுறுத்தினார்.