ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் கடும் போர் தொடுத்து வருகிறது. கடந்த 7 நாட்களாக நடந்து வரும் மோதலில் இருதரப்பிலும் சேர்த்து இதுவரை 3,000-த்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இஸ்ரேலிய ராணுவ வீர்ர்களுக்கு ராஜஸ்தானின் புஷ்கர் பகுதியைச் சேர்ந்தவரான சுமித் சர்மா, ராஜஸ்தான் உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார். இஸ்ரேலில் இருக்கும் அவரை “கலு பாபா” என்றும் அழைக்கின்றனர்.
தினமும் 150 இஸ்ரேல் ராணுவ வீர்ர்களுக்கு ராஜஸ்தான் உணவு (தாலி) வழங்கி வருவதாக சர்மா தெரிவித்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்ரேலில் இருந்து வருகிறார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடும் சண்டை நீடித்து வரும் நிலையிலும், இஸ்ரேல் நாட்டிலிருந்து வெளியேற அவர் மறுத்து வருகிறார்.
“நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இருந்து வருகிறேன். இந்த நாட்டில்தான் நான் வேலைவாய்ப்பு பெற்று வசதியுடன் இருக்கிறேன். அப்படியிருக்கையில் எனக்கு அதிக வருமானம் ஈட்டிக் கொடுத்த நாட்டைவிட்டு நான் எப்படி வெளியேற முடியும்” என்கிறார் சுமித் சர்மா.
இங்குள்ள மக்களுக்கு நான் ராஜஸ்தான் உணவு வகைகளை தயாரித்துக் கொடுக்கிறேன். அவர்களும் உற்சாகத்துடன் அதை சாப்பிட்டு வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதையே ஹமாஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலைவிட்டு வெளியே எனக்கு மனம் இடம்கொடுக்கவில்லை என்றார் சர்மா.
ராஜஸ்தான் மாநில், புஷ்கரைச் சேர்ந்த சுமித் சர்மாவை இஸ்ரேலில் எல்லோரும் கலு பாபா என்று அழைக்கின்றனர். 2013 ஆம் ஆண்டு இஸ்ரேல் வந்த அவர், கோலன் பிராந்தியத்தில் உணவகம் நடத்தி வருகிறார். இங்கேயே திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் நிலையை வர்ணித்த சர்மா, “சுற்றியுள்ள பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்களின் சத்தம் எனக்கு கேட்கிறது. ஒரு ஏவுகணை என் அருகே வந்து விழுந்தது. நல்லவேளையாக நான் சுதாரித்துக் கொண்டு ஒரு சில விநாடிகளில் பதுங்கு குழிக்குச் சென்றதால் தப்பினேன் என்றார்.
ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த வாரம் இஸ்ரேல் நிலைகள் மீது அதிரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மோதல் உருவானது. ஹமாஸ் நடத்தி தாக்குதல்களில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. காசா முனையில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரோல் நடத்திய தொடர் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 1,900க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.