இனி வழக்கறிஞர்களே சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கலாம்... உச்சநீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த இளவரசன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்து திருமண சட்டப்பிரிவின் கீழ், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக பிரித்து சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், சுயமரியாதை திருமணமாக இருந்தால் வழக்கறிஞர் முன்னிலையில் திருமணம் நடந்ததாக திருமணச் சான்று வழங்க முடியாது என உத்தரவிட்டு இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து இளவரசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்திவைக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். தொழில்முறையில் அல்லாது தனிப்பட்ட முறையில் இதுபோன்ற திருமணங்களை வழக்கறிஞர்கள் நடத்திவைக்கலாம் என்று கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.