

ஏப்ரல் 16 , இன்று மாலை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானத்தின் மீது இன்னொரு விமானம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வழக்கமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் நிறுத்தப்பட வேண்டிய இடத்திற்கு அந்த நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தபோது , அங்கு அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு விமானமான ஆகாசா ஏர் மீது உரசி சென்றதால் இந்த விபத்து ஏற்படுத்துள்ளது. இந்த விபத்தின் போது இரண்டு விமானத்தின் இறக்கை பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தன.
பொதுவாக விமானங்கள் பார்க்கிங் செய்யப்படும் நேரங்களில் அருகில் உள்ள விமானங்களுடன் மிகவும் நெருக்கமாக செல்வது வழக்கம். மிகவும் கவனமாக விமானிகள் விமானத்தை பார்க்கிங் செய்தாலும் , சில நேரங்களில் போதிய இடைவெளி இன்றி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன.
இந்த விபத்தின் போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லாததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனாலும் விமானத்தின் இறக்கைப் பகுதியில் சேதமடைந்துள்ளதால் இரண்டு விமானங்களும் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இந்த விபத்து பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விரிவான விசாரணை நடத்த உள்ளது.