சீனாவில் எலுமிச்சம் பழத்துக்கு செம கிராக்கி!

எலுமிச்சம்
எலுமிச்சம்
Updated on

சீனாவில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடும் கட்டுப்பாடுகளையும்அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு எலுமிச்சை பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஜீரோ கோவிட் கொள்கையை தளர்த்திய பின், அங்கு மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளது. எனவே மக்கள் எதிர்ப்பையும் மீறி பொது முடக்கம், கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை அமல்படுத்த அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில், ஹைடியான் மற்றும் சோபியங் ஆகிய பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க முடியாமல் அரசு திணறி வருவது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கொரோனவிலிருந்து தப்பிக்க மாற்று வழிகளை நோக்கி மக்கள் செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் சீன மக்கள் எலுமிச்சை பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் எலுமிச்சை பழங்களுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. அதனால் அரைகிலோ எலுமிச்சம் பழம் இந்திய மதிப்பில்  தற்போது ரூ.150 வரை விற்கப் படுகிறது. எலுமிச்சை மட்டும் அல்லாமல் விட்டமின் – சி சத்து நிறைந்த ஆரஞ்சு, பேரிக்காய் பழங்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.நேரடி சந்தைகளிலும் ஆன்லைனில் பழங்களை விற்கும் தளங்களிலும் மக்கள் இந்த பழங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை கோவிட் தொற்றை குணப்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள், பழங்களை மட்டுமே நம்பி இருக்காமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீன மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com