கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க கோரிக்கை!

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு  தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க கோரிக்கை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளித்து, அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில், பணி அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், அது தொடர்பாக புகாரளித்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்ய விஏஓக்களுக்கு கைத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் முதலமைச்சருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கடந்த மாதம் 25 ஆம் தேதி, கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சேலம் மாவட்டம் மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமாரை, சிலர் கொலை செய்யும் நோக்கில் விரட்டிய சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ”முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டது போன்ற மற்றொரு நிகழ்வாக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானாத்தாள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த வினோத்குமாரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டி கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்று உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் போன்று நடைபெறும் சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களும், அச்சத்தோடும் பாதுகாப்பற்ற நிலை இருந்த போதிலும், நேர்மையாக பணி செய்து வருகின்றனர்.

அவ்வாறு பணி செய்யும் நேர்மையான அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு தற்காப்பு பயிற்சியை உடனடியாக அரசு வழங்கவும், தேவைப்படும்பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், புகார் மனு அளித்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், வருவாய்த்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com