இளம் பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் பணத்தை தர மறுப்பதா? உயர் நீதிமன்றம் கேள்வி!

இளம் பெண்ணின் மறுமணத்தை காரணம் காட்டி இன்சூரன்ஸ் பணத்தை தர மறுப்பதா? உயர் நீதிமன்றம் கேள்வி!

டந்த 2010ம் ஆண்டு மே மாதம் கணேஷ் என்பவர் அவருடைய மனைவியுடன் மும்பை - புனே நெடுஞ்சாலையைக் கடந்து காம்ஷெட் பகுதியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்று மோதிய திடீர் விபத்தில் சிக்கி கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த கணேஷ், தாம் உயிருடன் இருந்தபோது, ‘இஃப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் கம்பெனி’யில் காப்பீடு ஒன்றைச் செய்திருந்தார். இதனால் அவரது மனைவி அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தனது கணவர் விபத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையைத் தரக் கோரினார். இன்சூரன்ஸ் நிறுவனம் அதனை இழுத்தடித்துக் கொண்டிருக்க அதற்குள் அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த மறுமணத்தை சுட்டிக் காட்டிய இன்சூரன்ஸ் நிறுவனம், ‘காப்பீட்டுத் தொகையை தர வேண்டியதில்லை’ என்று கூறியது.

இந்த நிலையில், அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடினார். மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி எஸ்.ஜி.டிகே, இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்தார். அதில், ‘மனுதாரர் கணவர் கணேஷ் மறைவுக்குப் பின்னர் மறுமணம் செய்து கொண்டதால் நிறுவனம் அவருக்கு இழப்பீட்டுத் தொகையை தரத் தேவையில்லை’ என்று கூறியிருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, "இன்சூரன்ஸ் நிறுவனம் தரும் இழப்பீட்டை வாங்குவதற்காக ஒரு விதவைப் பெண் வாழ்நாள் முழுவதும் தனியாக இருக்க வேண்டியதில்லை. விபத்து நடந்தபோது அந்தப் பெண்ணுக்கு வயது 19. அவருடைய அந்த வயது அவர் மறுமணம் செய்ததற்கான போதுமான நியாயத்தைச் சொல்கிறது. மேலும், மறுமணம் சமூகம் விலக்கி வைக்க வேண்டிய விஷயமில்லை. அதற்காக அவருடைய கணவர் விபத்தில் இறந்ததற்கான காப்பீட்டுத் தொகையைத் தர மறுக்க முடியாது" என்று கூறினார்.

நீதிபதியின் இந்த சமரசத்தை ஏற்காத இன்சூரன்ஸ் நிறுவனம், "விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ தானே மாவட்டத்துக்குள் மட்டுமேதான் பயணிக்க அனுமதியுள்ளது. ஆனால், அந்த ஆட்டோக்காரர் விதிகளை மீறி வேறு இடத்தில் ஓட்டி விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனால் நாங்கள் இழப்பீடு தரத் தேவையில்லை" என்றது.

இதனைக் கேட்ட நீதிபதி, "இது ஒரு பலவீனமாக நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்சூரன்ஸ் நிறுவனம், இது தங்கள் இன்சூரன்ஸ் பாலிஸிக்கு எதிரானது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது. அதனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com