

பாதுகாப்பாக பயணம் செய்யவும் பயணச் செலவு குறைவாகவும், அதிக தூர பயணத்திற்கும் களைப்பு தெரியாமல் வசதியாகப் பயணிக்கவும் ரயில் போக்குவரத்தையே அனைவரும் விரும்புகின்றனர். மேலும் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பயணிகள் அதிகம் வருகை தரும் 30க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் பொருட்டு டிஜிட்டல் லாக்கர் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அதிக பயணிகள் வருகை தரும் சென்னை சென்ட்ரல், காட்பாடி, திருச்சி, மேல்மருவத்தூர் ,திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு 'டிஜிட்டல் லாக்கர் வசதி 'பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் லாக்கருக்கு ஆறு மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரயில்வே மதுரை, கோவை, ராமேஸ்வரம் ,பெங்களூரு உள்ளிட்ட 30-க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் டிஜிட்டல் லாக்கர் வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் லாக்கர் திட்டத்தை செயல்படுத்தும் போன் செல் நிறுவன விற்பனை பிரிவு மேலாளர் சண்முகசுந்தரம் இது குறித்து கூறும்போது , பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பாக ரயில் நிலையங்களில், திருப்பி அளிக்கும் வகையில் ரயில்வே துறையிடம் ஒப்பந்தம் செய்து டிஜிட்டல் லாக்கர் வசதியை திறம்பட செயல்படுத்தி வருகிறோம்.
ரயில் நிலையங்களிலும் அதற்கு அருகில் உள்ள முக்கியமான ஆன்மீக சுற்றுலா மையங்களிலும் டிஜிட்டல் லாக்கர் வசதியை ஏற்படுத்தி வருகிறோம். மக்களிடம் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் தற்போது வரை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 27 இடங்களில் டிஜிட்டல் லாக்கர் வசதியை எங்கள் நிறுவனம் சார்பில் கொண்டு வந்துள்ளோம்.
இந்த டிஜிட்டல் லாக்கர் திட்டம் தமிழகத்தின் விழுப்புரம், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களிலும், கேரளாவில் உள்ள திருர், கோழிக்கோடு ரயில் நிலையங்களிலும், கர்நாடகாவின் மங்களூர் ரயில் நிலையத்திலும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.