பள்ளிச் சீருடையில் சட்டப் பேரவைக்கு வந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்..!

பள்ளிச் சீருடையில் சட்டப் பேரவைக்கு வந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்..!

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிச் சீ்ருடை வழங்காததைக் கண்டித்து இன்று தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பள்ளிச் சீருடை அணிந்தும், புத்தகப் பையையும் மாட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த திமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி  சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவைக்கு வந்த தி.மு.க. எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், நாஜீம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் ஆகியோர் பள்ளிச் சீருடை அணிந்தும், புத்தகப் பை மாட்டிக்கொண்டும் சைக்கிளில் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகள் தொடங்கி ஒருவருட காலம் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மாணவர்களுக்கு அரசு பள்ளிச் சீருடை  வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் வந்துள்ளனர்.

பின்னர், பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்காததால் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை  எதிர்கட்சி தலைவர் சிவா, ஒன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரை அரசுப்பள்ளி மாணவர் களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கப் படவில்லை என குற்றம் சாட்டினார்.  பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அதை நினைவு கூறும் வகையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் சீருடைகளை அணிந்து வந்து அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com