

நம்மூரில் சைக்கோ மனிதன், குரங்கு மனிதன் போன்ற மனிதர்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை எப்போதும் பரபரப்பு ஏற்படுத்தக் கூடியது ஏலியன்களை (வேற்றுகிரகவாசிகள்) பற்றிய செய்திகள் தான். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பரக் ஓபாமா , பிரபல அமெரிக்க யூ டியூபர் பிரையன் டைலரின் வேகமாக கேள்வி சுற்றுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அதில், ஏலியன் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஒபாமா "வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மைதான். ஆனால் , அதை நான் ஒருபோதும் நேரில் பார்த்தது இல்லை. பலரும் அமெரிக்காவின் ரகசிய விமானப்படை தளமான ஏரியா 51 இல் , அமெரிக்க ராணுவம் ஏலியன்களின் விண்வெளியை ஓடத்தை பிடித்து வைத்திருப்பதாக கூறப்படும் கதைகளில் உண்மையில்லை. அந்த இடத்தில் வேற்று கிரகவாசியையோ அவர்களின் விண்கலத்தையோ , பதுக்கும் அளவிற்கு பாதாள அறை வசதிகள் எதுவும் அங்கு இல்லை" என்று கூறினார். இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் , அதை அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவரிடம் மறைத்திருக்க முடியாது என்றும் விளக்கி இருந்தார்.
ஏலியன்களை பற்றிய ஒபாமாவின் பேச்சு உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்றது. அதன் ,பின்னர் "வேற்றுகிரகவாசிகளை பற்றிய தன்னுடைய கருத்திற்கு தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை , இந்த பிரபஞ்சம் தரவுகளின் படி மிகவும் பெரியது , இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மட்டுமே தனியாக இருக்க வாய்ப்பில்லை. சூரிய மண்டலத்திற்கு அப்பாலும் பல கிரகங்கள் உள்ளதால் வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் , ஆனால் மிகவும் நீண்ட தூரம் காரணமாக, அவர்கள் பூமிக்கு வருவதில் சாத்தியங்கள் குறைவு என்றும் தெரிவித்திருந்தார். தனது அதிபர் பதவி காலத்தில் ஏலியன்களை தொடர்பு கொண்டதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் தான் கண்டதில்லை என்றும் , தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்று அழைக்கப்படும் ரகசிய விமானதளம் ஒன்று உள்ளது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இது வேற்று கிரகவாசிகளை பற்றிய செய்திகளுக்கு தீனியாக இருக்கிறது. அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இந்த தளத்தை விமான சோதனை தளமாகவும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை சோதிக்க பயன்படுத்தப்படும் தளமாக மட்டுமே இருப்பதாக பலமுறை கூறியுள்ளனர்.
ரோஸ்வெல் விபத்து (1947):
1947 இல் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஒரு விண்கலம் விழுந்து நொறுங்கியதாக செய்திகள் பரவியது. அங்கு வேற்றுகிரகவாசிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டு Area 51 பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இன்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் ராணுவம் இதை பறக்கும் தட்டு என்று கூறினாலும் , பின்னர் ராணுவம் அது ஒரு பெரிய பலூன் என்று மட்டுமே கூறியது. இந்த சம்பவம் தான் ஏலியன்களைப் பற்றிய பல்வேறு கதைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது. அதே ஆண்டில் கென்னத் அர்னால்ட் என்பவர் அமெரிக்க வான்வெளியில் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பிரிட்டன் அனுபவம்:
பிரிட்டனில் 1961இல் பெட்டி மற்றும் பார்னி ஹில் என்ற தம்பதிகள் ஹிப்னாஸிஸ் சிகிச்சையின் போது , தங்கள் காரில் சென்றபோது ஏலியன்கள் தங்களை கடத்தியதாக சோதனையில் தெரிவித்திருந்தனர். 1994 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே நாட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு விண்கலம் ஒன்று தரையில் இறங்கியதையும், அதிலிருந்து விசித்திர உருவம் வெளியேறுவதையும் பார்த்துள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள 60 குழந்தைகளும் ஒரே மாதிரி இந்த சம்பவத்தை கூறியதால் அதில் உண்மை இருக்கலாம் என்று நம்பப்பட்டது.
இஸ்ரேல் - பாலஸ்தீன் :
1946-48 ஆண்டுகளில் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையே பெரிய போர் நடைபெற்றது. அப்போது வானில் பல விசித்திர ஒளிகளும், பறக்கும் தட்டுகளும் பறந்ததாக இரு பக்கமும் உள்ள ராணுவ வீரர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இஸ்ரேல் வீரர்கள் தங்களுக்கு ஆதரவாக கடவுள்தான் பறக்கும் தட்டுகளை அனுப்புவதாக அப்போதைய செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களிலும் இஸ்ரேல் , பலஸ்தீனம் , லெபனான், காசா எல்லைகளில் வானில் மர்ம பொருட்களை கண்டறிந்ததாக தகவல்கள் உள்ளன.