உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா தீர்மானிப்பதற்கு முக்கிய காரணம் சர்வதேச வர்த்தகத்தில் மிகப் பெரும் அளவு அமெரிக்க டாலரைக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது என்பதால் தான். இந்த நிலையில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுடைய நாட்டு பணங்களை கொண்டு பரிவர்த்தனை நடத்த முயற்சி எடுப்பது வழக்கம். இதன் மூலம் தங்களுடைய நாட்டினுடைய பணத்தின் மதிப்பு அதிகரிப்பதோடு, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் வளர்ச்சி அடைய வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தியாவும் சில நாடுகளுடன் ரூபாயில் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ரஷ்யா, உக்ரைனுடனான போர் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன.ரஷ்யா அதன் பிறகு ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது. இந்தியா, ரஷ்யா இடையே 2022 ஆம் ஆண்டு 10.60 மில்லியன் டாலர் என்று இருந்த பரிவர்த்தனை, 2023 ஆம் ஆண்டு 51.30 மில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. சலுகை விலையில் பெறப்படும் எண்ணெய்யும் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பரிவர்த்தனை மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்பொழுது ரஷ்யா, இந்தியாவின் ரூபாய்க்கு பதிலாக சீனாவின் யூவானைக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக பிரபல செய்தி நிறுவனமா ராய்ட்டர்ஸில் செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே இருப்பதாலும், ரஷ்யாவிற்கு தேவையான பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பதாலும், இந்திய ரூபாயைக் கொண்ட பரிவர்த்தனை ரஷ்யாவிற்கு சிக்கலாக இருப்பதாக கூறி ரஷ்யா சீனாவின் யூவானைக் கொண்டு இனி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறி இருக்கிறது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.