மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா வரும் 1ந் தேதி தொடங்கி 10ந்தேதி வரை நடைபெற உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இந்தத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வைக் காண அன்று லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர்.
கள்ளழகர் வைகை எழுந்தருளும் வைபவம் தொடர்பாக மதுரை அழகர்கோவில் இணை கமிஷனர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர், "மதுரை மாவட்டம், அழகர்கோவில் சித்திரை திருவிழா வரும் 1ந் தேதி தொடங்கி 10ந் தேதி வரை நடைபெறுகிறது. 3ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்கு வருகை தருகிறார்.
இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 5ந் தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கமாக உள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயைப் பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களைக் கலந்து பீய்ச்சுகிறார்கள். இதனால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றார்கள்.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கோயில் நிர்வாகம் சார்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.