

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 'பரீட்சா பே சர்ச்சா' நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார். இந்த உரையாடல் கோயம்புத்தூர், ராய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் குஜராத் இடங்களில் நடைபெற்றது. அப்பொழுது தொழில்நுட்பத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் அதை தங்களுடைய திறன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்றைய குழந்தைகள் தொலைக்காட்சியோ, மொபைல் போனோ இல்லாமல் உணவு கூட சாப்பிடுவதில்லை என்று கவலை தெரிவித்தார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில்நுட்பங்கள் விவாதப் பொருளாகும். ஆனால் நாம் அவற்றிற்கு அடிமையாக மாறாமல் நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும், அவற்றை தங்களுடைய திறன்களை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்.
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி வழி இருக்கிறது. இரவில் படிப்பதா அல்லது காலையில் படிப்பதா என்பது அவரவர்களுடைய விருப்பம். அடுத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மாற்றங்களை செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் செயல்படுங்கள் என்று கூறினார். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு போதுமான தூக்கமும், முந்தைய வினாத்தாள்களை நன்கு பயிற்சி செய்யவும் பரிந்துரைத்தார். தேர்வுகள் மதிப்பெண்களுக்காக மட்டுமல்ல, அது ஒரு சுய மதிப்பீடு(self assessment) என்றும், தேர்வுகள் ஒரு சுமை அல்ல கொண்டாட்டம் என்றும் கூறியவர் கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேர்வு மன அழுத்தத்தைத் தவிர்த்து, நேர மேலாண்மை மற்றும் சவால்களை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
தலைமைத் தன்மை குறித்து பேசும்பொழுது தலைமை என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல. குறைந்தது 10 பேருக்காவது நம் எண்ணங்களை தெளிவாக எடுத்து சொல்லும் திறனே முக்கியமான தலைமை பண்பாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் தேர்வுகள் குறித்து மாணவர்களிடையே இருந்த பயத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.