‘சாதியின் பெயரால் யாரையும் தள்ளிவைக்காதீர்’ 34 ஜோடி திருமணங்களை நடத்திவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

‘சாதியின் பெயரால் யாரையும் தள்ளிவைக்காதீர்’ 34 ஜோடி திருமணங்களை நடத்திவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (7.7.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 34 ஜோடிகளுக்கு திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

அந்தத் திருமண விழாவில் அவர் பேசும்போது, “எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது! குறிப்பாக, கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டு பெண்கள் உட்பட, பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோயில்கள் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்து சமய அறநிலையத் துறையை நீதிக்கட்சி உருவாக்கியது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

CM_MKSq

திமுக ஆட்சி மலர்ந்த பிறகு திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழைமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன முறையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3,986 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை அதன் பழைமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்கள் வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு நான்கு ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழைமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறக் கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன். கடந்த காலத்தில் ஆயிரம் கிராமப்புறக் கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்களின் எண்ணிக்கையை 1,250 ஆகவும் நிதியுதவியை 2 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், இரண்டு ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கோயில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம்!

மறைந்த பெரியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், 'கோயிலைச் சுற்றிலும் மக்கள்; மக்களைச் சுற்றிலும் கோயில்கள்' என்று சொல்வார். மக்களுக்கு நன்மை செய்யவே கோயில்கள் இருக்கின்றன. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்தத் துறைக்கு, ‘இந்து சமயத் துறை’ என்று பெயரல்ல, ‘இந்து சமய அறநிலையத் துறை’ என்று பெயர். அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com