

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (MIB) புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகளின் வரைவு, 11 கோடி தொலைக்காட்சிகளை முடக்கிவிடும், கேபிள் மற்றும் DTH சந்தாக் கட்டணங்களை நான்கு முதல் ஆறு மடங்கு வரை உயர்த்தும், அதிக உரிமக் கட்டணங்களை விதிக்கும் மற்றும் லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் பொய்யானவை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்(PIB) தெரிவித்துள்ளது. மேலும் இத்தகவல்கள் போலியானவை என்று குறிப்பிட்ட PIB, கேபிள் சந்தாக் கட்டணங்களை உயர்த்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் இந்த வரைவு விதிமுறைகளில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டிவி (Cable TV) (கேபிள் கட்டணம்)மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டிவிக்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.
அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பரவும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற ஜூலை 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த ஏற்பாடுகளும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பிஐபி (PIB)-இன் தகவலின்படி, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பை நிர்வகிக்கும் தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதே முன்மொழியப்பட்ட விதிகளின் நோக்கமாகும்.
அதாவது, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ (வானொலி ) சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது.
வரைவு தொலைத்தொடர்பு விதிகள்
ஜூன் 12 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘தொலைத்தொடர்புச் சட்டம், 2023-இன் கட்டமைப்பிற்குள், பழைய தந்திச் சட்டம், 1885-இன் கீழ் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்கு வெளியிடப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைக்கும் வகையில் 'தொலைத்தொடர்பு (தொலைக்காட்சி, வானொலி மற்றும் தொடர்புடைய சேவைகள்) விதிகள், 2026'க்கான வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.’
இவ்விதிகள் அறிவிக்கப்பட்டதும், தற்போதுள்ள பல ஒலிபரப்பு வழிகாட்டுதல்களுக்குப் பதிலாக ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை கட்டமைப்பு அமலுக்கு வரும். இந்த வரைவு விதிகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* ஒத்திசைக்கப்பட்ட மற்றும் பகுத்தறிவுடன் கூடிய அங்கீகார நிபந்தனைகள்.
* அங்கீகார செயல்முறையை டிஜிட்டல் முறையில் செயல்படுத்துதல்.
* எளிமைப்படுத்தப்பட்ட அங்கீகார நடைமுறைகள்.
* அனுமதி வழங்கும் ஒப்பந்தத்தில் (GOPA) கையெழுத்திட வேண்டிய கட்டாயம் நீக்கப்படுதல்.
* ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான வெளிப்படையான தீர்வு காணும் முறை.
இந்த வரைவு விதிகள் குறித்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஜூலை 27, 2026 வரை வரவேற்கப்படுகிறது.
எனவே, தொலைத்தொடர்பு வரைவு விதிகள் ஒழுங்குமுறை கட்டமைப்பைச் சீரமைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும், கேபிள் மற்றும் டிடிஎச் கட்டணங்களை அதிகரிப்பதற்கான எந்தவொரு விதியையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.