
துபாய் மற்றும் மும்பையை இணைக்கும் நீருக்கடியில் ரயில் பாதை திட்டம் ஆய்வுகளுடன் முன்னேறி வருகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும், பயண நேரத்தை குறைக்கும், மேலும் பல நாடுகளை இணைக்கும்.
துபாய் மற்றும் மும்பையை இணைக்கும் வகையில் நீருக்கடியில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆய்வுகளுடன் முன்னேறி வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஆலோசகர் பணியக லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் அப்துல்லா அல் ஷெஹி தெரிவித்துள்ளார்.
கலீஜ் டைம்ஸுக்குச் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த லட்சியத் திட்டம் குறித்த முன்னேற்றங்களைப் அப்துல்லா அல் ஷெஹி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு இன்னும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த முயற்சி நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அல் ஷெஹி உறுதிப்படுத்தினார்.
இந்தத் திட்டம் குறித்துப் பல்வேறு துறைகளிடமிருந்து ஒப்புதல் பெறும்வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ நிதி உறுதிப்பாட்டையும் அளிக்க முடியாது என்று அல் ஷெஹி வலியுறுத்தினார்.
எனவே, திட்டத்தின் தொடக்கத்திற்கான தெளிவான காலக்கெடு இப்போதைக்கு நிச்சயமற்றதாகவே உள்ளது.
நீருக்கடியில் அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் பயணிக்கச் சுமார் நான்கு மணிநேரம் ஆகும். ஆனால் கடலுக்கு அடியில் இயக்கப்படும் ரயில் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அப்போது, பயண நேரம் வெறும் இரண்டு மணிநேரமாகக் குறையும்.
இந்தத் திட்டத்தின் முதன்மை இலக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதாகும். இருந்தாலும், இந்த ரயில் பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படும் எனவும், எண்ணெய், நீர் உள்ளிட்ட பொருட்களின் பரிமாற்றத்தையும் எளிதாக்கும் என்றும் அல் ஷெஹி எடுத்துரைத்தார்.
இந்தத் திட்டத்தின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, மத்திய இந்தியாவில் உள்ள நர்மதா நதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டம். மேலும் இந்த ரயில் பாதை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஓமன் உள்ளிட்ட பல நாடுகளை இணைக்கும். இது வர்த்தகப் பாதைகளை மாற்றக்கூடிய ஒரு சர்வதேசப் போக்குவரத்து வழித்தடமாகவும் இருக்கும்.
அரபிக் கடலின் மேற்பரப்பிலிருந்து 20-30 மீட்டர் கீழே கட்டப்பட்ட கான்கிரீட் சுரங்கப்பாதைகள் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இத்தகைய மகத்தான திட்டத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை இன்னும் ஆய்வு கட்டத்தில்தான் உள்ளன. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் மகத்தான நன்மைகள் கிடைக்கும்.
இத்திட்டம் தவிர, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பும் திட்டம் போன்ற பல புதுமையான யோசனைகளை அப்துல்லா அல் ஷெஹி தனது பேட்டியில் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.