

தமிழக முதல்வர் விஜய் சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று திருச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். மதிமுகவின் இளைஞர் அணி பொது செயலாளரான துரை.வைகோ,திருச்சி விமான நிலையத்திற்கு சென்று முதல்வர் விஜய்யை சால்வை அணிவித்து வரவேற்றார்.
துரை.வைகோவின் இந்த செயல் திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயை சந்தித்த பின்னர் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை துரை வைகோ நடத்தினார். அந்த சந்திப்பின்போது "விஜய் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை , அவருக்கு ஆறு மாதங்களோ ஒரு வருடமோ அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்ளலாம்.
திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
என்னுடைய தனிப்பட்ட கருத்துகளோ பொதுச் செயலாளரின் தனிப்பட்ட கருத்தோ வைத்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எங்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டத்தை ஜூன் 17ஆம் தேதி கூட்டுகிறோம். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் மனநிலை எப்படி இருக்கிறது? கட்சி தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? இந்த கூட்டணியில் நாங்கள் தொடரலாமா ? என்று அந்த கேள்வியை நாங்கள் பொதுக் குழுவில் வைக்கும் பொழுது, நிர்வாகிகளின் மனநிலையின் படி முடிவெடுக்க முடியும். எங்களது இயக்கம் ஜனநாயகம் இருந்தது எதுவாக இருந்தாலும் பொது குழுவில் தான் முடிவெடுக்க முடியும்.
தவெக கூட்டணியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகாதா?
கட்சி தாவல் தடை சட்டம் என்பது கட்சி சொன்னதை கேட்காமல் செயல்படுவதால் நடவடிக்கை எடுப்பது. எங்களது பொதுக்குழுவில் நாங்கள் ஒரு தீர்மானம் போட்டால் எம்எல்ஏ பதவி பறிபோய் விடுமா? மதிமுக என்பது ஒரு தனிப்பட்ட அரசியல் இயக்கமாகும்.
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்தும் அதிமுகவினரை இழுப்பது ஏன்?
ஒரு கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சியின் தலைமையை விரும்பாவிட்டால் அவர்களின் செயல்பாடுகளை விரும்பாவிட்டால் , தனிப்பட்ட முடிவெடுக்கும் போது உரிமை அவர்களுக்கு உண்டு. அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிக்கும் செல்லலாம் அல்லது அரசியலை விட்டு ஒதுங்கலாம். இந்த கேள்வியை நீங்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும்.
தவெக அரசிற்கு ஆதரவளிப்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது
நாங்கள் துரதிஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டோம். அந்த காரணத்தினால் எங்களால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் நான் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது , கட்சி தான் அனைத்து முடிவை எடுக்கும்.
துரை.வைகோ இன்று விஜயை சந்தித்து பேசியது, திமுகவினரிடம் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து தங்கள் இயக்கம் 17ம் தேதி முடிவெடுக்கும் என்று கூறியதும் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.