

நேற்று திமுகவின் முன்னாள் அமைச்சர் நேரு , மதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினரான துரை.வைகோ , " எங்கப்பா கோபக்காரர் , கொஞ்ச நாள் பொறுங்க , என்னால் கட்சி நடத்த முடியாது, நான் திமுகவிற்கு வந்துவிடுகிறேன்" என்று கூறியதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த துரை.வைகோ, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர் , அரசியல் விமர்சகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கினை வழங்கி உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவை, திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வலியுறுத்தினர் , மேலும் அவர்களுக்கு கேட்டதை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சீட்டுகளும் ஒதுக்கப்பட்டன. அப்போதில் இருந்தே திமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையில் உரசல் நிலவி வந்தது.
தேர்தல் காலத்தில் இதற்கு ஒப்புக்கொண்ட மதிமுக , தேர்தல் முடிந்தவுடன் தவெகவிற்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சியில் பங்கு பெற விரும்பியது. ஆனால் , மதிமுக சார்பில் வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக வசம் சென்றுவிட்டதால் , அமைச்சரவையில் இடம்பெற நினைத்த மதிமுகவின் எண்ணம் நிறைவேறாமல் போனது .
இதற்கு பின்னர் திமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையில் நேரடியான வார்த்தை மோதல் தொடங்கி இருந்தது. நேருவின் விமர்சனத்திற்கு பதில் கொடுத்த துரை.வைகோ, "திமுகவினர் தனி நபர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தின் மீதும் வார்த்தைகளால் தாக்குவது நடத்துவது எல்லாம் எனக்கும் தெரியும். என்னாலும் அவற்றை திருப்பி செய்ய முடியும். அவர்கள் என்னை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள் , அதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல. நான் இந்த ஊருக்கு (திருச்சி) எவ்வாறு வந்தேனோ? அதேபோல் நல்ல பெயர் எடுத்து ஊருக்கு செல்ல வேண்டும், என்று நான் நினைக்கிறேன்.
நான் திமுகவில் இணைய வேண்டும் என்று எப்போதும் கூறியது இல்லை , நேரு கூறுவது ஒரு கட்டுக்கதை. தனக்கு அரசியலில் விருப்பமோ, எந்த ஒரு பதவியையும் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையோ கிடையாது . நான் எனது அப்பாவிற்காகவும் , தொண்டர்களுக்காகவும் தான் அரசியலுக்கு வந்தேன். நான் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து போன்றது.
பாராளுமன்ற தேர்தலில் நான் திருச்சி தொகுதியில் நின்ற போது, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு எனக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுத்தனர். திமுக சின்னத்தில் நின்றால் தான் கட்சிக்காரர்கள் வேலை செய்வார்கள் என்றெல்லாம் கூறினார்கள். நேரு என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியும். அவர், அவருடன் இருந்த எம்எல்ஏக்களையே காலி செய்துள்ளார், சட்டமன்றத் தேர்தலில் திருச்சியின் முக்கியமான திமுக வேட்பாளர் தோல்வி அடைய நேரு தான் காரணம்," என்றார்.
மேலும் அவர் ,நேரு என்னிடம், ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது, கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது. இந்த பையனை (உதயநிதி) வைத்து என்ன அரசியல் செய்வது? என்றும் தன்னிடம் பேசியதாக துரை.வைகோ தெரிவித்து இருந்தார். ஸ்டாலின் மற்றவர்களை நாகரிகமாக பேசுமாறு கூறுகிறார், அவர் முதலில் தனது கட்சிக்காரர்களிடம் அதைக் கூற வேண்டும். என்று துரை.வைகோ காட்டமாக பேசி இருந்தார்.
தற்போது இரண்டு பக்கமும் வார்த்தை போர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேருவின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் துரை.வைகோவின் , பழைய காணொளிகளை வெளியிட்டு விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதே நேரம் சமூக வலைதளங்களில் நேரு வீழ்த்திய திருச்சியின் முக்கிய புள்ளி யார்? என்று ஆராயத் தொடங்கியுள்ளனர்.