ஆப்கானிஸ்தான் நாட்டின் மலைப்பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.8 என பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் உள்ள தீர்க்கரேகையில் 36.38 டிகிரி வடக்கே அட்ச ரேகையிலும், கிழக்கே 70.77 டிகிரியிலும் அமைந்திருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் வசித்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலி தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. டெல்லியின் என்சிஆர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் கத்ரா பகுதி, மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அடிப்படை முகாம் மற்றும் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் மற்றும் பிற நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.