Earthquake
Earthquake

#JUST IN: குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ஒரே மாதத்தில் 4-வது முறை! பொதுமக்கள் அச்சம்..!

Published on

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் குஜராத்தில் ஏற்படும் 4-வது நிலநடுக்கம் இதுவாகும்.தற்போதைய நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முழுமையாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இன்று அதிகாலை 4:30 மணியளவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள், அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி, பெரிய அளவில் உயிர்ச்சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி இதே கட்ச் மாவட்டத்தில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால், கட்ச் மாவட்டம் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள (High-Risk Zone) பகுதியாகக் கருதப்படுகிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 13,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அந்தப் பெரும் பாதிப்பின் வடு இன்னும் மறையாத நிலையில், அடிக்கடி ஏற்படும் இந்த நில அதிர்வுகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. நிலநடுக்க அச்சத்திலிருந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்களாகலாம் என்பதே யதார்த்தமான உண்மை.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய Top ஹீரோக்களின் 10 படங்கள்!
Earthquake
logo
Kalki Online
kalkionline.com