கெஜ்ரிவாலுக்கு 4 வது முறையாக சம்மன்: கைது செய்யப்படுவாரா?

கெஜ்ரிவாலுக்கு 4 வது முறையாக சம்மன்: கைது செய்யப்படுவாரா?

ம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. இப்போது நான்காவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் ஆஜராகாவிட்டால் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மூன்றாவது முறை சம்மன் வந்த போது அரவிந்த் கெஜ்ரிவால்.  “கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலைக்  கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா? ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான்.

ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது.எனக்கு அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன்.

ஆனால், ஒருமுறைகூட அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. போலியாக தொடரப்பட்ட இந்த வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சிலரை சிறையில் அடைத்துள்ளனர், . அவர்களில் யாருக்கும் எதிராகவும் எந்த ஆதாரமும் இல்லை. எதையும் அவர்களால்  நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் சட்டவிரோத சம்மன்களை நான் மதிக்க வேண்டுமா?. பாஜகவின் நோக்கம் நியாயமான விசாரணை அல்ல. மாறாக அரசியல் மிரட்டல். ஆம் ஆத்மி கட்சியை மக்களவைத்  தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதே அவர்களின் நோக்கம். விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து, பின்னர் என்னை கைது செய்ய விரும்புகிறார்கள். அப்படி செய்தால் நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது. அதை தடுக்கவே இந்த நடவடிக்கை   என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22  நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com