

சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, த.மா.கா, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிகவும், புதிய தமிழகமும் இணைய வாய்ப்புள்ளது. 2021 தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் இத்தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் களத்தில் அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர், த.வெ.க என்ற நான்குமுனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனித்துப் போட்டியிடும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ல் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளுக்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்து, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திட்டமிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலையும், அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்ட கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்டமிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் போன்ற 10 அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று 15 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக வேகமும் தீவிரமும் காட்டி வருகிறது அதிமுக.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று வேட்பாளர் அறிமுகம் செய்வது ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம். ஜெயலலிதா அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தான் வெளியிடுவார்கள். அது போல் பழனிச்சாமியும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியிட முடிவு செய்துள்ளார்!