‘SCSP நிதியை வேறு திட்டத்துக்கு மாற்றி சமூக நீதிப்பிழை புரிந்த திமுக அரசு’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

‘SCSP நிதியை வேறு திட்டத்துக்கு மாற்றி சமூக நீதிப்பிழை புரிந்த திமுக அரசு’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

‘சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் வழங்கக்கூடிய SCSP நிதியான 1560 கோடி ரூபாயை பொது மகளிர் மாதாந்திர திட்டத்துக்காக மாற்றி, சமூக நீதிக்கு திமுக அரசு பெரும் பிழை இழைத்துள்ளது. இதற்காக எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்து இருக்கிறார்.

இது சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் (X) பக்கத்தில், “பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடி ரூபாயை பொது மகளிர் மாதாந்திர திட்டத்துக்காக மாற்றி, சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூக நீதி பேசி வரும் இந்த அரசு, உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம்‌ இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்றுப் பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி,  இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com