

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே , நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது , பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். அத்துடன் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இன்று தனது அடையாளத்தை இழந்துவிட்டது. அது பாஜகவின் அடிமை கூட்டணி கட்சியாக மாறி உள்ளது. அதனால் தமிழகத்தின் நலன்களை அதிமுக பாதுகாக்க முடியாது. பாஜகவை எதிர்த்து போராட ஸ்டாலின் போன்ற எழுந்து நின்று போராடும் தலைவர்கள் தான் நமக்கு தேவை என்று பேசி இருந்தார்.
கார்கேவின் இந்த பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த பாஜகவின் மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று , கார்கே மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி , நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை தேசிய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருந்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவின் இந்த கருத்துகள் பிரதமர் மோடிக்கு எதிரானது மட்டுமல்ல , இந்தியாவில் வசிக்கும் 140 கோடி மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அவமானம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
பாஜக மத்திய அமைச்சர்களின் புகாரை அடுத்து , தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜுன கார்க்கேவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் , டெல்லி காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.