
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, அதன் டேட்டா அனோடேஷன் (data annotation) குழுவில் இருந்து குறைந்தபட்சம் 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, சாட்பாட் Grok-ஐ மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவான பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களைப் பணியமர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பிசினஸ் இன்சைடர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கத்திற்கான காரணம்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் 12, 2025 இரவு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "எங்கள் மனித தரவு முயற்சிகளை விரிவாக மதிப்பாய்வு செய்த பிறகு, பொதுவான செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுவிப்பாளர் (general AI tutor) பணிகளில் கவனம் செலுத்துவதைக் குறைத்து, நிபுணத்துவ செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுவிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த உத்தி உடனடியாக அமலுக்கு வரும்," என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், "இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, பொதுவான செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுவிப்பாளர் பதவிகள் இனி தேவையில்லை.
எனவே, உங்களுடனான எங்கள் வேலைவாய்ப்பு முடிவுக்கு வருகிறது," என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் நிலை என்ன?
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர்களின் ஒப்பந்தம் முடியும் நாளான நவம்பர் 30, 2025 வரை ஊதியம் வழங்கப்படும்.
ஆனால், பணிநீக்க அறிவிப்பு வெளியான உடனேயே நிறுவனத்தின் கணினி அமைப்புகளுக்கான அவர்களின் அணுகல் துண்டிக்கப்பட்டுவிட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், xAI நிறுவனத்தின் மிகப்பெரிய குழுவில் இருந்தவர்கள். அவர்கள் மூலத் தரவுகளை வகைப்படுத்தி, Grok சாட்பாட்டிற்கு உலகைப் புரிந்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் முக்கியப் பணியைச் செய்து வந்தனர்.
இந்த பணிநீக்கத்திற்குப் பிறகு, டேட்டா அனோடேட்டர்கள் பயன்படுத்தும் ஸ்லாக் (Slack) குழுவில் இருந்த 1,500 உறுப்பினர்களின் எண்ணிக்கை, சில மணி நேரங்களில் 1,000 ஆகக் குறைந்துள்ளது.
xAI புதிய பணியாளர்களைத் தேடுகிறது:
பணிநீக்கங்களுக்கு மத்தியில், xAI நிறுவனம் "நிபுணத்துவ செயற்கை நுண்ணறிவுப் பயிற்றுவிப்பாளர்" (Specialist AI tutors) பதவிகளுக்குப் புதிய பணியாளர்களைத் தேடி வருவதாக எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம் சமூக ஊடக தளமான X-ல் அறிவித்தது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களைப் பணியமர்த்தி, உண்மையைத் தேடும் செயற்கை பொது நுண்ணறிவை (AGI) உருவாக்க உதவுமாறு xAI அழைப்பு விடுத்துள்ளது.