‘ஐயாயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு’ சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு!

‘ஐயாயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு’ சென்னை திரும்பிய முதல்வர் அறிவிப்பு!

மிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலீகளை ஈர்க்க  கடந்த ஒன்பது நாட்களாக பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை விமான நிலையம் திரும்பிய முதலமைச்சரை செய்தியாளர்கள் சந்தித்து சில கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறி இருப்பது குறித்தான கேள்விக்கு, ‘இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்’ என்றார்.

அடுத்து, ‘நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவி இருப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமைதானே’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘அது உண்மையான சோழர் கால செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு பெருமைதான். ஆனால், அது அப்படி இல்லை என்று சில வரலாற்று அறிஞர்களே சொல்லி வருகிறார்கள். செங்கோல் வாங்கிய அன்றே அது வளைந்துவிட்டது. அதற்கு உதாரணம்தான் இந்தியாவிற்கு புகழ் ஏற்படுத்திக் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் எல்லாம் அடித்து உதைத்து கைது செய்யப்பட்ட காட்சிகளே சாட்சி’ என்றார்.

அடுத்ததாக, ‘செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களின் இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்துள்ளது குறித்து’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘பாஜக ஆட்சியை பொறுத்தவரை வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்குவது, அச்சுறுத்துவது என பல மாநிலங்களில் நடப்பது தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கி உள்ளது’ என்று கூறினார்.

அடுத்து, ‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பி இருப்பது குறித்து என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டபோது, ‘அது பழனிசாமியின் புத்தி; தன்னை போலவே எல்லோரும் இருப்பார்கள் என அவர் கருதி இருக்கிறார்’ என்று கூறினார்.

அடுத்ததாக, சிங்கப்பூர், ஜப்பான் முதலீடு ஈர்ப்பு பயணம் குறித்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக நல்லுறவை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ, ஒகேனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஜப்பான் பங்கு உள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆக, உற்பத்தி துறையில் உலகுக்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு, அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோளாக உள்ளது.

ஏற்கெனவே தொழில் முதலீடுகள் ஈர்க்க தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஜப்பானுக்கு சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தார். குறைந்தபட்சம் மூன்றாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அந்த வகையில் முந்தைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இன்றைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் தொழில்துறை அலுவலர்களும் முனைப்பாகச் செயல்பட்டு ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 1891 கோடி முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே சென்னையில் என் முன்பு கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து ஐ.பி. நிறுவனம் 312 கோடி ரூபாய், டைசல் நிறுவனம் 83 கோடி ரூபாய், கியோ குட்டா நிறுவனம் 113.9 கோடி ரூபாய், மிட்சுமிசா இந்தியா 155 கோடி ரூபாய், பாலி ஹோஸ்டோபீல் 150 கோடி, பாலியோஸ் கோஹே 200 கோடி, பாலியோஸ் சட்டோ ஹோஜி 200 கோடி, ஓம்ரான் ஹெல்த்கேர் 128 கோடி ரூபாய் என மொத்தம் 3233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுமட்டுமின்றி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டுக்கும், தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்க்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பின்போது பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர், ஜப்பான் நிறுவனங்கள் முனைப்போடு உள்ளது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு வந்திருக்கிறேன்’ என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com