

2027ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஆடை ஏற்றுமதியில்' டிஜிட்டல் பாஸ்போர்ட் கட்டாயம்' ஆகிறது. இதனால் இந்தியா முன்னுரிமை பெற்ற நாடாக உயரும் என வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீடித்த நிலையான வளம், குன்றா வளர்சி நிலை என்ற உற்பத்தி நிலையை ஐரோப்பிய யூனியன் சட்டமாகவே மாற்றியுள்ளது. இதனால் 2027 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவின் பல்வேறு விதிமுறைகளை ஏற்று அதன்படி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் மட்டுமே வர்த்தக உறவு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பாஸ்போர்ட் என்பது ஒவ்வொரு ஆடைகளிலும் க்யூ.ஆர்.கோடு வசதிகளுடன் கூடிய அட்டை பொருத்தப்பட்டிருக்கும் .அதை ஸ்கேன் செய்து பார்த்தாலே பருத்தி விளைந்த இடம், பஞ்சாக மாறியது, நூல் உற்பத்தி, சாயமிட பயன்படுத்திய தண்ணீர், ஒரு ஆடையின் மறுசுழற்சி அம்சங்கள், ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்திக்கு பயன்படுத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என பஞ்சாக இருந்து ஆடையாக மாறிய அனைத்து நிலைகளும் ,அவை நடைபெற்ற இடங்களும் என நாம் வாங்கும் ஆடை குறித்த அனைத்து புள்ளி விவரங்களும் தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.
இதனால் ஆடை குறித்த தகவல்களை வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் ஆடை வாங்கும் மக்களும் அறிந்து கொள்ளலாம். திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகளில் சாயக்கழிவில் 96 சதவிகிதம் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்த பின்பே சுழற்சி முறையில் பயன்படுத்த படுகிறது. உலக அளவில் இந்த சாதனை வேறு எந்த நாடுகளிலும் இல்லை. மேலும் உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 10 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனை பொருத்தவரை கழிவுகளை பூமியில் விடாமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்தியா மட்டுமே பூர்த்தி செய்கிறது. 'டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டமும்' தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் அமலுக்கு வரும்போது ,இந்திய ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசகர் பெரியசாமி கூறியுள்ளார்.
எனவே ஆடைக்கு 2027 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் கட்டாயமாக்கி உள்ளது இந்திய ஆடை ஏற்றுமதிக்கு வாய்ப்பு கூடும் என்பதே வர்த்தக ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.