மனைவியின் வற்புறுத்தலால் நடந்த அற்புதம்..! புற்றுநோயை வென்ற முன்னாள் இங்கிலாந்து பிரதமர்..!

மனைவியின் வற்புறுத்தலால் நடந்த அற்புதம்.
Lord David Cameron
Lord David Cameron © Sean Gallup:Getty Images
Published on

"ஆண்கள் பொதுவாக ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசத் தயங்குவார்கள், நாமெல்லாம் பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள்." – முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சொன்ன வார்த்தைகள் இவை. 

ஆனால், இன்று இவரே, பல லட்சக்கணக்கான ஆண்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஆம், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போதைய வெளியுறவுச் செயலாளருமான லார்ட் டேவிட் கேமரூன், தனக்கு ஏற்பட்டிருந்த ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்கான சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மரணத்தை அறிவிக்கும் அந்த வினாடிகள்... உள்ளுக்குள் ஏற்பட்ட பதற்றம்!

இந்தச் சிகிச்சை அனுபவத்தைப் பற்றிப் பேசிய கேமரூன், ஒரு வருடத்திற்கு முன்பு, தனது மனைவி சமந்தாவின் வற்புறுத்தலால் தான் பரிசோதனைக்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Samantha and David Cameron at Downing Street
Samantha urged David Cameron to test for prostate cancerCredit: Getty Images

பிரபல கிளப்பான 'சோஹோ ஹவுஸ்'-இன் நிறுவனர் நிக் ஜோன்ஸ் ரேடியோவில் தனது புற்றுநோய் அனுபவத்தைப் பகிர்ந்ததைக் கேட்ட பின்னரே, சமந்தா அவரைப் பரிசோதனைக்குச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.

PSA இரத்தப் பரிசோதனை, MRI ஸ்கேன் மற்றும் பயாப்ஸிக்குப் பிறகு அவருக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

"உங்களுக்கு எப்போதும் அந்தக் கொடூரமான வார்த்தைகளைக் கேட்க அச்சமாக இருக்கும். மருத்துவரின் வாயிலிருந்து அவை வெளியேறும் வினாடிகளில், 'ஐயோ! அவர் அது  தான்  (புற்றுநோய்) என்று  சொல்லிவிடுவாரே!' என என் மனம் பதறியது. கடவுளே, அவர் அதைச் சொல்லிவிட்டார்," என்று 'தி டைம்ஸ்' பத்திரிகையுடனான பேட்டியில் தன் பயத்தை அவர் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

சிகிச்சை முறை: அவர் 'ஃபோகல் தெரபி' (Focal Therapy) என்ற சிகிச்சை முறையைப் பெற்றுள்ளார்.

இதில், மின் துடிப்புகள் (Electrical Pulses) மூலம் புற்றுநோய் செல்கள் மட்டும் குறிவைத்து அழிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு வயதே ஆன தனது அன்பு மகன் இவானை, 'ஓட்டஹாரா சின்ட்ரோம்' (Ohtahara syndrome) எனப்படும் அரிதான மரபணுக் கோளாறுக்கு பலிகொடுத்தவர் கேமரூன்.

மகன் இவானை இழந்த பேரிழப்பின் வலி, அவருக்கு மருத்துவ ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அதன் காரணமாக, அவர் ஆக்ஸ்போர்டு ஆய்வு மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, அரிய நோய்களுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறியும் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட மகிழ்ச்சியில், அவர் இப்போது ஒரு புதிய கோரிக்கையை முன்வைக்கிறார்.

உயர் ஆபத்தில் உள்ள ஆண்களுக்கு மட்டும் ப்ரோஸ்டேட் பரிசோதனைகளை இலக்கு வைத்துச் செய்ய வேண்டும்.

"ஆண்கள் தங்கள் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசத் தயங்குவார்கள், ஆனால் இந்த விஷயத்தில் நாம் நிச்சயமாகப் பேசவும், செயல்படவும் வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜோன்ஸின் கோரிக்கை: கேமரூனைப் பரிசோதனை செய்யத் தூண்டிய நிக் ஜோன்ஸ், இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

"இங்கிலாந்தில் முக்கியப் புற்றுநோய்களில் இதற்கு மட்டும் பரிசோதனைத் திட்டம் இல்லை என்பது முற்றிலும் அபத்தமானது.

தீர்வு இருக்கும்போது ஆயிரக்கணக்கானோர் தேவையில்லாமல் இறக்கின்றனர்," என்கிறார் அவர்.

புற்றுநோய் இங்கிலாந்து (Prostate Cancer UK) அமைப்பின் சியாரா டி பயாஸ், "கேமரூன் சரியான நேரத்தில் புற்றுநோயைக் கண்டறிந்து வெற்றிகரமான சிகிச்சையைப் பெற்றதில் மகிழ்ச்சி.

இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 12,000 தந்தையர், சகோதரர்கள், மகன்கள் இந்த நோயால் இறக்கின்றனர்.

ஆண்கள் அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கக்கூடாது," என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கேமரூனின் இந்த அறிவிப்பு, ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் பரிசோதனைத் திட்டங்களின் அவசியத்தைப் பற்றிய உரையாடலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com