கிணற்றில் விழுந்த பசுவைக் காப்பாற்றச் சென்ற விவசாயி மரணம்!

கிணற்றில் விழுந்த பசுவைக் காப்பாற்றச் சென்ற விவசாயி மரணம்!

Published on

ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாறாங்கல் ஒன்று தவறி விழுந்ததில் கால் இடறி பசு ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றில் விழுந்த மாட்டை மீட்க அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கிணற்றுக்குள் இறங்கினர். அதில் டி.மணி எனும் 42 வயது விவசாயியும் ஒருவர்.

பசு, மணியின் உறவினருக்கு உரியது என்று கூறுகிறார்கள். கிராம மக்களுடன் கிணற்றில் இறங்கிய மணி, பசுவை மீட்க அதை ஒரு கயிற்றில் பிணைத்துக் கட்டி மேலே தூக்க முயற்சித்திருக்கிறார். அப்போது கிணற்றின் சுவரில் இருந்த பெரிய பாறாங்கல் ஒன்று சரிந்து மணியின் தலையில் விழுந்திருக்கிறது . இதனால் பலத்தை காயமடைந்த மணி உடனே தண்ணீரில் மூழ்கி இறந்தார் என்று கூறப்படுகிறது . கிணறு 50அடி ஆழம் உடையது என்பதால் கிராம மக்கள் மேற்கொண்டு அவரை மீட்க முயற்சிக்கவில்லை என தகவலறிந்து அங்கு சென்ற காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

காவல்துறை அதிகாரிகள் மூலமாகத் தகவல் அறிந்து ஆத்தூரில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஐந்து மணி நேரம் கழித்து மணியின் உடலை மீட்டனர். பசுவையும் மீட்டனர்.

ஆத்தூர் ஊரக காவல்துறையினர் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதியப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்கச் சென்று அநியாயமாகத் தானே பலியான இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

logo
Kalki Online
kalkionline.com