ஈரானின் அதிபராக இருந்த முகமது ரெய்சி, ஜூன் 15-ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அதிபர் பதவிக்கு அங்கு ஜூன் 28 ல் தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலில் சீர்திருத்தங்களுக்கு ஆதரவான மசூத் பெசஷ்கியான் 2.45 கோடி ஓட்டுகளில், 1.04 கோடி ஓட்டுகளை பெற்று முதல் இடத்திலும், பழமைவாதியான அணு ஒப்பந்தத்தில் பங்கேற்ற முன்னாள் தலைவர் சயீத் ஜலீலி, 94 லட்சம் ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.
ஈரான் நாட்டு சட்டத்தின்படி, மொத்த ஓட்டுகளில், 50 சதவீதம் பெற்றவர்களே அதிபராக பதவியேற்க முடியும். எனவே இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று(ஜூலை05) நடந்தது. இதில், முதல் கட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் போட்டியிட்டனர். இரண்டாவது கட்ட தேர்தலில் 3.05 கோடி ஓட்டுகள் பதிவாகின. இதன் முடிவில் பெசஷ்கியான் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி கூடுகிறது. மறுநாள் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல், ஆகஸ்ட் 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
"அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.கவை தோற்கடித்தது போல், குஜராத்திலும் பா.ஜ.கவை தோற்கடிப்போம்" என குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர் பி குருதேவ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஹராரே மைதானத்தில் தொடங்கியுள்ள முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில், கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.