

சென்னை குடிநீர் வாரிய வளாகத்தின் வெளிப்புறத்தில் அதிகப்படியான குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பெரிய குப்பைக் கிடங்கு திடீரென தீப்பற்றியுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாகவும், அதிக காற்றின் வீச்சின் காரணமாகவும் குப்பையில் பற்றிய தீ நொடிப்பொழுதில் ஒட்டுமொத்த வளாகத்திற்கும் பரவியது. இதனால் அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதியுற்றனர்.
தீ வேகமாகப் பரவியதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், விபத்துக்கு குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு அவசர தகவலும் தந்தனர். தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் இந்த காட்சிகளைப் பதிவும் செய்தனர். தீ விபத்து காரணமாக மேடவாக்கம்- வேளச்சேரி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். இந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
அதே போல் இன்னொரு தீ விபத்து பள்ளிக்கரணையில் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், பைக்குகள் எரிந்து சாம்பலானது. பயங்கர தீ விபத்து காரணமாக ஏராளமான கார்கள் எலும்புக் கூடாக காட்சியளிக்கின்றது.
அந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைவில் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.