சென்னை மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதி என்பதால் தீபாவளி நேரத்தில் தீ விபத்துகள் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து, 23 தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன,” என, தீயணைப்பு துறை டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.
தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'தீ விபத்தில்லா தீபாவளி' என்ற தலைப்பில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, தீயணைப்புத் துறை சார்பில் செயல் விளக்கம் மற்றும் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தீயணைப்பு துறை டி.ஜி.பி., பி.கே. ரவி, தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பின், செய்தியாளர்களிடம் தீயணைப்பு துறை டி.ஜி.பி. பேசினார்.
அதில் தீயணைப்பு துறை சார்பில் இதுவரை பள்ளிகல்லுாரி மாணவ மாணவியருக்காக 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1,120 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் 6,563 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 861 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6,673 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.