

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் எக்ஸ்சல் என்ற தனியார் பட்டாசு ஆலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பட்டாசு ஆலையில் இருந்து நான்கு முறை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டதாக அருகிலிருக்கும் பகுதிகளில் உள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மடத்துப்புரம் மற்றும் சிவகாசியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது.
பட்டாசு ஆலை என்பதால் வெடிகள் அதிக சத்தத்துடன் வெடித்த படியும் தீ பரவிய படியும் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தாமதமாவதாகக் தெரிகிறது. அதே நேரம் அருகிலிருக்கும் கிராமங்களில் உள்ள மக்கள் எவரும் அங்கு வந்து விடாமல் எச்சரிக்கை தந்து வருகின்றனர்.
தீ கட்டுக்குள் வந்ததும் தான் அங்கு தொழிலாளர்கள் இருந்தார்களா மற்றும் சேதத்தின் பாதிப்பு பற்றி தெரியவரும்.
இத்துடன் ராணிப்பேட்டை ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட மேலும் ஒரு தீ விபத்தில் அந்த கடையின் உரிமையாளர் பவன்லால் மற்றும் அவரது மனைவி சுந்தரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது கோடை வெப்பம் அதிக அளவில் இருக்கும் நேரத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பொதுமக்களும் தீ விபத்து தடுப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.